Description
இந்த நூல் தருக்கமுறையில் வரலாற்றைச் சொல்லிச் செல்கிறது. இதிலே காலங்களின் இயங்குநிலைகளோடு கூடிய வரலாறு இருக்கிறது. மன்னர் களின், பாளையங்களின் வாரிசுரிமைகளும் அதிகாரப்பகிர்வுகளோடும் கூடிய அரசியல் இருக்கிறது. சாதிகளாகவும், வலங்கை-இடங்கையாகவும், வேளாண் குழுக்களாகவும், வாணிகக் குழுக்களாகவும், சேவைக் குழுக்களாகவும் கட்டமைந்து கிடந்த சமூக அமைப்பு இருக்கிறது. குடும்பம். பெண், நிலப்பாகுபாடு, கல்வி, கலை முதலியவை உள்ளிட்ட பண்பாட்டுத் தளம் இருக்கிறது. நிலமானியங்கள், பண்ணை உற்பத்திமுறை, கைத்தொழில், வாணிகம் உள்ளிட்ட பொருளாதாரம் இருக்கிறது. மொத்தத்தில், தமிழகத்தில் நாயக்கர்காலத்தின் பன்முகப்பட்ட பரிமாணங்களைக் காணுகிறோம். நுணுக்கமாக விவரங்களும், இயங்குநிலைகளோடு கூடிய நிகழ்வுகளும் அவற்றின் எதிர்வினைகளும், வெறுமனே நீள்படுக்கையாக அல்லாமல் விமரிசனத்தோடு எடுத்துரைக்கப்படுகின்றன.
இந்த ஆராய்ச்சிக்கு, ஏற்கெனவே சொன்னதுபோல, இலக்கியங்களே மூலாதாரம். பின்னிடைக்காலத்து மொழியையும் அதன் பொருண்மையையும் உள்நுழைந்து வாசிப்புச் செய்தால் தெரியும், இது எவ்வளவு சிரமமானது என்று. இந்த மொழிக்கிடங்குக்குள் ஆழந்தெரியாமல் காலை விடக் கூடாதுதான். ஆனால் முத்துக்களும் பவழங்களும் ஆழத்துக்குள் தானே படிந்து கிடக்கின்றன. ஆழங்கால்படுவது ஆராய்ச்சியின் அறைகூவல். அதனை அ. ராமசாமி ஏற்றுக்கொண்டு, இந்த இலக்கியங்களில் மூச்சடக்கி மூழ்கி முத்துக்களை வாரியெடுத்துத் தந்திருக்கிறார்.

Reviews
There are no reviews yet.